|
வெள்ளி விழா திருப்பலி பாதியில் நிறுத்தம்
திருவாடானை : ராமநாதபுரம், திருவாடானை அருகே, ஓரியூர் அருளானந்தர் ஆலய வெள்ளி விழாவில் தகராறு ஏற்பட்டு, திருப்பலி பாதியில் நிறுத்தப்பட்டது. ஓரியூர் ஆலயத்தில் நேற்று, சிவகங்கை மறை மாவட்டம் சார்பில் வெள்ளி விழா நடந்தது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் திரண்டனர். காலை 10 மணிக்கு, மதுரை பிஷப் பீட்டர் பெர்னாண்டோ தலைமையில், திருப்பலி துவங்கியது. மனித உரிமை மற்றும் தலித் கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில், ஏராளமானோர் ஆலயம் முன் திரண்டனர். சிவகங்கை மறை மாவட்டத்தில் மத குருவாக பயிற்சி பெற்ற மாணவரை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் சேர்க்கக் கோரியும், பலர் கோஷமிட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகியும், திருப்பலியை தொடர முடியவில்லை.
விழாவில் கலந்து கொண்டவர்களும், போராட்டம் நடத்தியவர்களும் மோதிக்கொண்டதில், டியூப் லைட், ஒலிபெருக்கி பெட்டிகள் நொறுக்கப்பட்டு, சேர்கள் வீசப்பட்டன. பின், திருப்பலி நிறுத்தப்பட்டது. இம்மோதலில், மகாலிங்கம் என்பவர் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிவகங்கை மறை மாவட்ட பிஷப் சூசைமாணிக்கம் கூறியதாவது: திருச்சி பவுல் சபையில் படித்து வந்த ஆறு பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில், மைக்கேல்ராஜ் என்பவரும் ஒருவர். மீண்டும் மைக்கேல்ராஜை சேர்க்கக்கோரி வலியுறுத்தப்பட்டது. ஒழுங்கு நடவடிக்கையை, ஏழு பிஷப்கள் எடுத்த முடிவாகும். எனவே, திருச்சி சபையில் சேர்க்காமல், வேறு சபையில் சேர்க்கலாம் என, கூறினோம்; இக்கருத்தை அவர்கள் ஏற்கவில்லை. வெள்ளி விழா திருப்பலி நடந்த போது, தகராறு செய்தனர். வெள்ளி விழாவை, மீண்டும் நடத்தும் திட்டம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மறை மாவட்ட வெள்ளிவிழாவில் மோதல் 112பேர் மீது வழக்குபதிவு
http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=104742&cat=504
தொண்டி, : தொண்டி அருகே மறைமாவட்ட வெள்ளிவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 112பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொண்டி அருகே ஓரியூரில் புனித அருளானந்தர் திருத்தலம் உள்ளது. மதுரை மறைமாவட்டத்தில் இருந்து சிவகங்கை மறைமாவட்டம் பிரிந்து 25ஆண்டு நிறைவானதையடுத்து வெள்ளி விழா நடத்த ஓரியூரில் நேற்றுமுன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையொட்டி 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் திருத்தலத்தில் கூடியிருந்தனர். மதுரை பேராயர் பீட்டர் தலைமையில் காலை 10.30மணிக்கு திருப்பலி நடக்க இருந்தது. திருப்பலியில் பங்கேற்க ஆயர்கள், பங்கு தந்தைகள் வந்திருந்தனர்.
ஆர்.எஸ். மங்கலம் அருகே ஓடைக்காலை சேர்ந்த மைக்கேல் என்பவர் குருபட்டம் பெறுவதற்காக திருச்சி பவுல் சபையில் படித்து வந்தார். மைக்கேல் உள்பட 6 பேரை சில குற்றச்சாட்டுகளை கூறி திருச்சி பவுல் சபை நீக்கியது. இதில் மைக்கேலை மீண்டும் சேர்த்து அவருக்கு குருபட்டம் வழங்க வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் திருப்பலி நடக்க இருந்தபோது தலித் கிறிஸ்தவ அமைப்பின் மாவட்ட தலைவர் ஸ்டீபன்ராஜ் தலைமையில் ஏராளமானோர் தலையில் கருப்புக்கொடியை கட்டிக்கொண்டு திருப்பலி நடத்து வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். மைக்கேலை மீண்டும் சபையில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் திருப்பலி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
திருவாடானை டிஎஸ்பி மோகன்ராஜ், தாசில்தார் பழனியாண்டி, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்சாமுவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில் கூட்டத்தில் சிலர் புகுந்து கலவரம் செய்தனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து ஓரியூர் விஏஓ கொடுத்த புகாரின் பேரில், எஸ்.பி.பட்டினம் போலீசார் ஓரியூர் சந்தானதாஸ், தொண்டி கஸ்பார்பாண்டியன் உட்பட 112பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.